சிம்பு கரியரில் அதிக வருவாய் ஈட்டிய படம் ‘பத்து தல’ - தயாரிப்பாளர் பெருமிதம்

 



சென்னை: கடந்த மாதம் 30-ம் தேதி நடிகர் சிலம்பரசன் மற்றும் கௌதம் கார்த்திக் நடிப்பில் ‘பத்து தல’ திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்தப் படத்திற்கு அமோக ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி என தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார். படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார் அவர்.

சிலம்பரசன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், டீஜே அருணாசலம், கலையரசன், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் கிருஷ்ணா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஸ்டூடியோ கிரீன் மற்றும் பென் ஸ்டூடியோஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரித்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

“எங்களின் 'பத்து தல' திரைப்படம் தமிழகம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும், உலகம் முழுவதும் 500 திரையரங்குகளிலும் இன்று இரண்டாவது வாரத்தில் நுழைந்துள்ளது. எங்களின் படத்திற்கு ரசிகர்களிடம் இருந்து இவ்வளவு அமோக வரவேற்பு கிடைத்திருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. அதற்காக, சிலம்பரசன் (STR) ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு முழு மனதுடன் எங்களது நன்றிகளை தெரிவிக்க விரும்புகிறோம். படம் குறித்து பாராட்டி அதை உயர்த்திய விமர்சகர்கள் மற்றும் ஊடகங்களின் ஆதரவிற்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்.

‘பத்து தல’ திரைப்படம் சிலம்பரசனின் கரியரில் அதிக வருவாயை ஈட்டிய ஒரு படமாக மட்டுமல்லாமல், எங்களின் தயாரிப்பு நிறுவனத்திற்கும் பெரும் லாபம் தந்திருக்கக்கூடிய படமாகவும் அமைந்ததுள்ளது.



சிலம்பரசன் இந்தப் படத்தின் ஒரு முக்கிய அங்கமாக இருந்து, அவரது சிறப்பான ஆதரவைக் கொடுத்து உதவியுள்ளார். குறிப்பாக இசை வெளியீட்டு விழா மற்றும் பிற புரோமோஷன்களின் போது கலந்து கொண்டு படத்திற்கு ஒரு பெரிய கவன ஈர்ப்பைக் கொண்டு வந்து படம் பல வழிகளில் வெற்றிபெற உதவியதற்காக அவருக்கு எங்களது நன்றியை தெரிவிக்க விரும்புகிறோம்.

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எங்களது சிறப்பு நன்றி. திரைப்படத்தின் இந்த மூன்று வருட பயணத்தில் தனது உற்சாகத்தைத் தக்கவைத்து, அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் கவரும் வகையில், தரமான கமர்ஷியல் எண்டர்டெய்னரை கொடுத்த இயக்குநர் ஓபிலி என். கிருஷ்ணா அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.

முழு ஆதரவை வழங்கிய அன்பான கௌதம் கார்த்திக் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். படத்தின் வெற்றிக்கு சிறந்த பங்களிப்பை வழங்கிய மற்ற கலைஞர்கள் பிரியா பவானி சங்கர், கௌதம் வாசுதேவ் மேனன், கலையரசன், சந்தோஷ் பிரதாப், டீஜே அருணாச்சலம், அனு சித்தாரா, மது குருசுவாமி, ரெடின் கிங்ஸ்லி, கவிஞர் மனுஷ்யபுத்திரன், சென்றாயன், சௌந்தரராஜா மற்றும் பிறருக்கும் எங்கள் நன்றிகள்.

ஒளிப்பதிவாளர் ஃபரூக் ஜே பாஷா, எடிட்டர் பிரவீன் கேஎல், கலை இயக்குநர் மிலன், ஆடை வடிவமைப்பாளர் உத்ரா மேனன், வசனம் எழுதிய ஆர்.எஸ். ராமகிருஷ்ணன், ஆடியோகிராஃபர் எஸ்.சிவக்குமார், சவுண்ட் டிசைனர் கிருஷ்ணன் சுப்ரமணியன், ஆக்ஷன் கோரியோகிராஃபர் சக்தி சரவணன், பாடலாசிரியர்கள், பாடகர்கள் மற்றும் இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருக்கும் நன்றி.

'நடன சென்சேஷன்' சாயிஷா சைகல் தனது நடனத்தால் மிகப்பெரிய வெற்றியை 'ராவடி...' பாடலின் மூலம் பெற்றுத் தந்துள்ளார். கடைசி நேரத்தில் நடனத்தில் தனது சிறப்பான பங்களிப்பைக் கொடுத்ததற்காக அவருக்கும் எங்களது ஸ்பெஷல் நன்றி” என தனது அறிக்கையில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார்.

படத்தின் விநியோகஸ்தகர்கள், பார்ட்னர்கள், சாட்டிலைட், டிஜிட்டல் உரிமம் பெற்ற நிறுவனங்கள் வழங்கிய ஆதரவுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

Comments