மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்


தமிழ்நாடு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் பிப்ரவரி 23ஆம் தேதி நடத்திய தாக்குதல் சம்பவத்தை வேதனையுடன் சுட்டிக் காட்டியுள்ளார். தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை நாட்டினர் பிப்ரவரி 15ஆம் தேதி தாக்குதல் நடத்திய சில நாட்களுக்குள் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியைச் சேர்ந்த 6 மீனவர்கள் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி அன்று தரங்கம்பாடி மீனவ கிராமத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றதாகவும், பாரம்பரிய கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது பிப்ரவரி 23ஆம் தேதி அதிகாலை 4.30 மணியளவில் இலங்கை கடற்படையினர் அவர்களை இரும்பு கயிறுகளைக் கொண்டு தாக்கியதாகவும், அவர்களின் மீன்பிடி உபகரணங்கள், இரண்டு பேட்டரிகள், இன்ஜின், ஜிபிஎஸ் கருவிகளை எடுத்துச் சென்றுவிட்டனர் என்றும், இத்தாக்குதலில் காயமடைந்த 5 மீனவர்கள் தரங்கம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

‛‛அனைத்து சர்வதேச விதிமுறைகள் மற்றும் மரபுகளை அப்பட்டமாக இலங்கை கடற்படை மீறுவதாகவும், பாக் வளைகுடா பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை இலங்கை கடற்படை தொடர்ந்து மீறி வருவதுடன், நமது மீனவர்களுக்கு கடுமையான காயங்களையும், பொருளாதார இழப்புகளையும் அடிக்கடி ஏற்படுத்துகின்றனர் என்பதை சுட்டிக் காட்டியதுடன், இத்தகைய வன்முறைச் செயல்கள் அதிர்ச்சியளிப்பதுடன் கண்டனத்திற்குரியது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், நமது மீனவர்கள் வாழ்வாதராத்துக்காக மீன்பிடிப்பதை மட்டுமே நம்பியுள்ளனர். மீனவர்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தப்படுவது மீனவர்கள் மத்தியில் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. இவ்விவகாரத்தை இலங்கை அரசிடம் வலுவாக எடுத்து சென்று நமது இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல்களை தடுக்க உயர்மட்ட அளவில் உறுதியான மற்றும் ஒருங்கிணைந்த தூதர வழிமுறைகள் வாயிலாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றும் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


 

Comments