நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி; மற்ற கட்சிகளின் நிலை என்ன? - ஒரு பார்வை


 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அமோக வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது திமுக கூட்டணி. உள்ளாட்சி அமைப்புகளில் கிட்டத்தட்ட 75%-க்கும் மேலான இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 10 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்றதால் தேர்தல் அறிவிக்கை நாள் முதலே தமிழகத்தில் தேர்தல் திருவிழா தொடங்கிவிட்டது. கடந்த 19-ம் தேதி தமிழகத்தின் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என தமிழகத்தில் உள்ள 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் தமிழகம் முழுவதும் 268 மையங்களில் இன்று எண்ணப்பட்டன. காலை 10 மணிக்கே திமுகவின் வெற்றி முகம் தெரியத் தொடங்கியது. பின்னர், இது அமோக வெற்றியாக மாறியுள்ளது

திமுகவின் அமோக வெற்றி: திமுகவுக்கு 65% வரை நகர்ப்புற உள்ளாட்சிகளில் வெற்றி கிட்டும் என்றுதான் அரசியல் விமர்சகர்கள் கூட கணித்தனர். ஆனால், 3 மணி நிலவரப்படி கிட்டத்தட்ட உள்ளாட்சி அமைப்புகளில் 75%-க்கும் மேலான இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. 21 மாநகராட்சிகளில் அனைத்தையும் திமுக கைப்பற்றியுள்ளது.

கடந்த 19 ஆம் தேதி சென்னையில் வாக்களித்துவிட்டுப் பேசிய முதல்வர் ஸ்டாலின், 21 மாநகராட்சிகளையும் நிச்சயம் திமுக கைப்பற்றும் என்று கூறினார். அதன்படியே வெற்றி கனிந்துள்ளது. சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 200 வார்டுகளில் 107 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. வடக்கு மண்டலம் திமுகவின் கோட்டை என்பதால் வெற்றி என நினைக்கக் கூடாது என்று நிரூபிக்கும் வகையில் மேற்கு மண்டலம், மத்திய மண்டலம், தென் மண்டலம் என அனைத்திலும் அதிமுகவை மாநகராட்சிகளில் அப்புறப்படுத்தியுள்ளது திமுக.

489 பேரூராட்சிகளில் 392 பேருராட்சிகளில் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற்றுள்ளன. 19 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றனர். 6 இடங்களில் பாஜகவும் பாமக ஓரிடத்திலும், அமமுக ஓரிடத்தில், நாம் தமிழர் கட்சி ஒரு பேரூராட்சியிலும் ஐஜேகே 2 பேரூராட்சிகளிலும் இன்னும் பிறகட்சிகள் 26 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

நகராட்சிகளைப் பொறுத்தவரை 138 நகராட்சிகளில் 131 நகராட்சிகளில் திமுக, 4 நகராட்சிகளில் அதிமுக, பாஜக ஒரு நகராட்சி, பிற கட்சிகள் 2 வெற்றி பெற்றுள்ளன. மதுரை நகராட்சியில் 9 வார்டுகளில் திமுக 7 வார்டுகளை திமுக, அதிமுக ஒரு நகராட்சி, பாஜக ஒரு வார்டுகளையும் கைப்பற்றியுள்ளன. மதுரை நகராட்சிகள் எப்போதும் அதிமுகவின் பலம் நிறைந்ததாகக் கருதப்படுபவை.

65% வெற்றி கணிக்கப்பட்ட இடத்தில் 80%-யும் கடந்து க்ளீன் ஸ்வீப் நோக்கி திமுக செல்வதற்கு என்ன காரணம் என்று அரசியல் நோக்கர்களிடம் கேட்டபோது, 10 ஆண்டுகால இடைவெளியை முதல் காரணமாகப் பட்டியலிடுகின்றனர். 10 ஆண்டுகளாக நகர்ப்புற உள்ளாட்சிகளில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால் பொதுமக்கள் எதற்கெடுத்தாலும் அதிகாரிகளையும் எம்எல்ஏ, எம்பிக்களையும் நமபி இருக்கும் சூழல் உருவானது. சில நேரங்களில் சிறிய பிரச்சினையை பெரிய இடத்திற்கு எடுத்துச் செல்ல முடியாமல் குழம்பி தவித்துள்ளனர். 10 ஆண்டுகால ஆட்சியில் அதிமுக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தாதலேயே இந்த நிலை என்று கூறுகின்றனர். ஆனால், எதிர்க்கட்சிகளோ ஆட்சி அதிகாரம், பண பலம், பல இடங்களில் கள்ள ஓட்டு, மிரட்டல் என அச்சுறுத்தி திமுக கல்லா கட்டியிருக்கிறது எனக் கூறுகின்றன.

பாஜகவின் வெற்றிக் கணக்கு; அதிமுகவின் தப்புக் கணக்கு! - இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக பெற்றுள்ள கணிசமான வெற்றி கவனம் பெற்றுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் சிறுபான்மையினர் வாக்குகளை இழந்ததாகக் கருதி இந்தமுறை பாஜகவை கூட்டணியில் சேர்க்காத அதிமுக தப்புக் கணக்குப் போட்டுவிட்டதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். வேலூரில் இஸ்லாமியர்கள் நிறைந்த மாநகராட்சி வார்டில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றிருப்பதை பாஜக தன் மீதான அடையாளத்தை மாற்றும் வெற்றியாகக் கருதுகிறது.

வேலூர் மாநகராட்சி 17வது வார்டில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர் சுமதி

தமிழக பாஜக தலைவர், ஒவ்வொரு வீட்டிற்கும் பாஜகவை கொண்டு சேர்ப்போம் என்று அறிவித்து மேற்கொண்ட பிரச்சாரம் பலனளித்துள்ளது. அதனாலேயே 21 மாநகராட்சிகளில் மதுரை, கரூர், திருப்பூர், சிவகாசி, நாகர்கோவில், திருச்சி, தூத்துக்குடி என பல மாநகராட்சிகளிலும் கணிசமான வார்டுகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது எனக் கூறுகின்றனர். அதிமுக அதிருப்தி வாக்குகள் பாஜகவுக்கு சென்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

மங்கிய டார்ச் லைட்: மக்கள் நீதி மய்யம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சற்றும் சோபிக்கவில்லை. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கோவையில் வானதி சீனிவாசனுக்கு டஃப் ஃபைட் கொடுத்தார் கமல்ஹாசன். நகர்ப்புறங்களில் மக்கள் நீதி மய்யம் எடுபடும் என்பதே இதுவரை அதன் மீதான பார்வையாக இருந்தது. ஆனால் இந்த முறை மநீம அதலபாதாளத்துக்குச் சென்றுள்ளது. இதற்கு ஆளும் கட்சி காட்டிய பிரம்மாண்டம் மிக முக்கியக் காரணம் எனக் கூறுகின்றனர் அக்கட்சியினர். தங்களால் வாக்குறுதிகளுடன் மட்டுமே மக்களை அணுக முடிந்த நிலையில் ஆளும், ஆண்ட கட்சிகள் அதிகாரம், பணபலத்துடன் அணுகின என்று அங்கலாய்த்துக் கொள்கின்றனர் அக்கட்சியினர்.

அரங்கேறக் காத்திருக்கும் அரசியல்: வார்டுகளில் தேர்ந்தெடுக்கப்படும் கவுன்சிலர்களைக் கொண்டு மாநகராட்சிகளுக்கான மேயர், துணை மேயர், நகர்மன்றங்களுக்கான தலைவர், துணைத் தலைவர், பேரூராட்சிகளுக்கான தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் மார்ச் 4-ஆம் தேதி நடைபெறும் மறைமுகத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படவிருக்கிறார்கள். இதில் தான் அத்தனை அரசியல் கூத்துகளும் அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, மாநகராட்சி தேர்தலில் மேயர், துணை மேயர் மறைமுகத் தேர்தலில் அமைச்சர்களுக்குள் போட்டாபோட்டி உருவாகும் எனக் கணிக்கப்படுகிறது. குறிப்பிட்டு உதாரணம் சொல்ல வேண்டுமானால், திருச்சி மாநகராட்சியை எடுத்துக் கொள்ளலாம். திருச்சி மாநகராட்சியில் மொத்தம் 65 வார்டுகள். இதில் 46 வார்டுகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 2 வார்டுகளிலும், சுயேச்சை ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளன. பாஜகவும் கணிசமான வாக்குகளைப் பெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு அமைச்சர் அன்பில் மகேஷ் கை காட்டுபவரா அல்லது அமைச்சர் கே.என்.நேரு கைகாட்டுபவரா யார் மேயர் ஆவார்கள் என்ற போட்டாபோட்டி இப்போதே நிலவுகிறது.

இதையெல்லாம் மனதில் வைத்தே வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாகவே திமுக தலைவர் ஸ்டாலின் "தேர்தல் முறை, மறைமுகமாக இருந்தாலும், நாம் வெளிப்படையாக இருக்க வேண்டும். தலைவர், துணைத் தலைவர் பதவிக்கு தி.மு.க. தலைமையால் அறிவிக்கப்படுகிறவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, முழுமையான அளவில் வெற்றி பெறச் செய்ய வேண்டியதும் தி.மு.க. நிர்வாகிகளின் கடமை. தோழமைக் கட்சிகளுக்கு கண்ணியமான அளவில் ஒதுக்கப்படும் பதவிகளுக்கும் கட்டுப்பாடான முறையில் ஆதரவளித்து வெற்றி பெறச்செய்ய வேண்டியதும் தி.மு.க.வினரின் பொறுப்பு. அதில் எள்முனையளவுகூட பாதிப்பு இருக்கக்கூடாது " என்று வலியுறுத்தி தொண்டர்களுக்கு கடிதம் எழுதினார் என்று கூறப்படுகிறது.


#Metropeople #News #newsupdates #Today #India #Tamilnadu #Chennai #Madurai #DMK #Mkstalin

Comments